உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, டிசம்பர் 21, 2008

இலங்கை பிரச்சினையும் ஓட்டு அரசியலும்

இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல... உலகில் எந்தவொரு நாட்டில் நடக்கும் எந்த மாதிரி பிரச்சினையும் நாம் நினைப்பதை விட சிக்கலானவையாக இருக்கும்...

நாம் வெகுசன பத்திரிகைகளின் கருத்தின் அடிப்படையிலும், பரவலாக பேசப்பட்டும், கேட்கப்பட்டும் வரும் கருத்தின் அடிப்படையிலும் எந்த பிரச்சினையையும் பார்த்து, பேசி பழக்கப் பட்டு விட்டோம்....

தேசிய அளவிலான எந்த ஒரு பிரச்சினைக்கும் நிச்சயம் பலவிதமான பரிமானாங்கள் இருக்கும்... அவற்றுள் அரசியல் ரீதியான பரிமானம் மட்டும் தான் முன்னிலைப் படுத்தப்பட்டு அனைவராலும் பேசப்படும்... ஏனெனில் ராணுவம், பாதுகாப்பு, உளவு ரீதியிலான பரிமாணங்கள் பொதுவில் விவாதததுக்கு வைக்க முடியாது....

ஒரே இந்தியாவாக சுதந்திரம் அடைய விடாமல் பல நாடுகளாக பிரித்து சுதந்திரம் அளித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஆரம்பித்து, சீனா பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை ஆரம்பிப்பது வரை எவ்வளவோ அந்தந்த நாட்டுக்கு, அவரவர் வரையில் அரசியல், ராணுவ பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் அடைய நமக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை ஈழ தமிழர்களுக்கு உள்ளது.

நமக்கு நம் நாட்டில் இருந்து பிரிவினை கோருபவர்களை எதிர்த்து சண்டையிட எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிங்கள ராணுவத்துக்கு உள்ளது...

இது மிகவும் சிக்கலான பிரச்சினை.. நான் தமிழன் அதனால் தமிழனுக்கு ஆதரவு கொடு என்னும் எண்ணம் எழுவது இயல்பு...

இதில் உலகில் நடுநிலை நாடாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை மிகவும் தர்மசங்கடமான நிலை....

ஏற்கனவே இலங்கை பிரச்சினையில் தலையிட்டு கையை சுட்டு கொண்டது... இந்தியாவின் தலையீட்டை கோரிய நாமே இந்திய ராணுவத்தை சபிக்கும் அவல நிலைக்கு சென்று விட்டது...

வங்காள தேசத்தின் விடுதலைக்காக இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பியது, கிழக்கில் பாகிஸ்தானின் தொல்லையை குறைக்க... ஆனால் அதே போல இலங்கை மீது இந்தியா கை வைத்தால் இலங்கை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ உதவிக்கு போய் விட்டால் இந்தியாவின் தெற்கு பகுதி பாதுக்கப்புக்கே அது அச்சுறுத்தலாக அமையலாம் என்ற நிலை..
(இதில் தமிழக மீனவர்களை கொலை செய்வது பாகிஸ்தான் ISI அமைப்பு என்னும் உறுதி செய்யப்படாத செய்தி குறிப்பிடத்தக்கது)

மொழியை அடிப்படையாக வைத்து ஒரு நாடு இந்தியாவின் வெகு அருகே உதயமாவதில் மொழிவாரியில் மாநிலங்கள் கொண்ட இந்திய தேசத்துக்கு உளவியல் ரீதியான பிரச்சினைகள் வரலாம் என்ற நிலை...(ராஜீவின் போக்கில் மாற்றம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூட ஒரு வதந்தி உண்டு)

பொதுவாக ஒரு நாட்டின் சர்தேச கொள்கை என்பது உள்நாட்டு அரசியல் மாற்றத்தைப் போறுத்து பெரிய அளவில் மாறக் கூடாது... உதாரணத்துக்கு அமெரிக்காவில் சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஜனநாயக கட்சி என்பது ஆட்சிக்கு வந்தாலும் அமேரிக்காவின் சர்வதேச கொள்கை என்பது பெரிய அளவில் மாறாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

ஆனால் இந்தியாவின் நிலை என்ன? மத்தியில் ஆட்சி மாறும் போதெல்லாம் நடுநிலை வாதமும், மதசார்பு வாதமும் மாறி மாறி நிலை கொள்ளும் நிலையில் உள்ளது நம் நாடு.
பிரச்சினையின் தீவிரம் புரியாமல் மேம்போக்காக அதை விவாதிப்பது சரியல்ல... அதற்காக போராடுகிறேன் பேர்வழி என்று கோக்குமாக்காக தேசிய நலனுக்கு எதிராக பேசுவது எல்லாம் தேவை இல்லாதது...

எது நியாயம், எது அநியாயம் என்பதெல்லாம் இடம், பொருள், காலம் இவைகளை பொறுத்து மாறும்...

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதில் எந்த தவறுமில்லை... அது நம் கடமையும் கூட...

ஆனால் இப்போது இலங்கை பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை... போராளிகளும் நிறைய தவறு செய்திருப்பார்கள், இலங்கை ராணுவமும் நிறைய தவறு செய்திருக்கும்... அந்த இடியாப்ப சிக்கல்களை கவனிக்க சர்வதேச சமூகமும், நிறைய நாடுகளும், அரசாங்ககளும் இருக்கின்றன..

இதில் நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்த ஒரு பாராளுமன்ற அமைப்பு இருக்கிறது... அதில் நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்... இந்த பிரச்சினையில் அவர்கள் செயல்பாடுகள் நமக்கு பிடிக்க வில்லையா... தேர்தல் வருகிறது... இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்படும் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஒற்றுமையாக இந்த அரசியல்வாதிகளும், கலைஞர்களும் செயல்பட்டு அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியாக நெருக்கடி கொடுக்கலாமே?

ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது நோக்கமாக இருந்தால் அகதிகளாக வரும் தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கவனிக்க ஒரு நலநிதி திட்டம் அமைத்து அதற்கு தமிழ் ஆதரவு நடிகர்களும், கலைஞர்களும், அரசியல்வாதிகளும் நன்கொடை வழங்கி கவனிக்கட்டுமே...

நமது அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை உணர்வு ரீதியான பிரச்சினையாய் மாற்றி அதில் குளிர் காய நினைக்கிறார்கள்... அமைப்பு ரீதியாக செயல்ப்பட்டு, தங்கள் நிலையை அரசாங்கத்திற்கு தெரிவித்து, ஜனநாயக ரீதியிலான நெருக்கடி கொடுக்க முடிகிறதா இவர்களால்?

மக்கள் உணர்ச்சி வயப்பட்டு எப்படி வேண்டுமானால் பேசலாம். அது அவர்களை பாதிக்கும். மிஞ்சி போனால் குடும்பத்தை பாதிக்கும். ஆனால் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவது, செயல்படுவது தான் கவலை அளிப்பதாக உள்ளது...

இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கு ஆதரவு தருகிறோம் என்ற போர்வையில் நம் அரசியல் வாதிகள் ஓட்டு அரசியல் செய்வதில் குறியாக இருப்பதாக படுகிறது.

ஈழ மக்களின் விடுதலை வேட்கை ஆதரவு நிலை என்பது ஒர் தளம்.. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கான ஆதரவு நிலை என்பது ஒரு தளம்.. மனித உரிமை மீறல்/இனப் படுகொலை எதிர்ப்பு என்பது வேறு தளம்...

இவற்றை பிரித்துப் பார்க்க முடியாது என்று வாதாட தோன்றலாம்... உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இவை வெவ்வேறு தளங்கள் என்பது புரியும்...

தனி ஈழம் என்பதை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தடை செய்யப் பட்ட போராளி இயக்கத்துக்கு ஆதரவு நிலையை எடுக்காமலே இங்குள்ளவர்கள் இயங்கலாம்...

மனித உரிமை மீறல் என்ற பிரச்சினை உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வேலை பார்க்கும் சிறுமிகள் கொடுமை படுத்தப்படுவதில் ஆரம்பித்து நேரங்காலம் இல்லாமல் வேலை பார்க்கும் ராணுவ வீரர்களின் நலன் வரை எல்லா இடத்திலும் இருக்கிறது... அதை எதிர்க்க எதற்கு தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றி பேச வேண்டும்? இங்கு தனி நாடு பற்றிய உளறல் ஏன்?

விலைவாசி உயர்வு, சிறு நலன்கள் பற்றிய போராட்டம் நடத்த அதை பற்றின ஆழ்ந்த அறிவோ அனுபவமோ, தேவை இல்லை...
ஆனால் சர்வதேச அளவில் பெரியதான பிரச்சினைகளை கையாள அமைப்பு ரீதியிலான அணுகுமுறையும், அந்த பிரச்சினையின் ஆழம், தீவிரம் அதை பற்றின அனுபவப்பூர்வமான புரிதல் இருத்தல் அவசியம்.

இவை எதை பற்றியுமே கவலைப்படாமல் வாய்க்கு வந்ததை பேசி நினைத்த படி செயல்படும் ஆட்களை என்ன சொல்லி என்ன?

இங்கே போராட்டம் செய்பவர்கள், நாம் எதற்காக போராடுகிறோம் என்பதை உணர்ந்து செயல்படுவதாக தெரியவில்லை....

இங்கே நம் ஆட்கள் செய்யும் போராட்டங்களால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன நலன் விளைந்துள்ளது என்பதும் புரியவில்லை.