உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூன் 18, 2009

சினிமா என்னும் குடிசைத் தொழில்

முன்பெல்லாம் ஒரு சினிமா படம் வெளியாக போகிறது என்றால் அவ்வளவு பரபரப்பாக இருக்கும்..

இப்போதெல்லாம் அப்படி இல்லை... வெள்ளிக்கிழமை தினத்தந்தி பார்த்தால், இந்த படம், அந்த படம் என்று ஏராளமான படங்களுக்கு பூஜை போடப்படுவதாக விளம்பரங்கள் வருகின்றன.

அப்பாவியான கிராமத்து தோற்றத்தில் கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல், நாயகன் நாயகி படங்களுடன் ஏதாவது ஒரு பெரிய மனிதரின் நல்லாசியோடு படப்பிடிப்பை தொடங்குவதாக ஏராளமான விளம்பரங்கள்...

கதாநாயகன் கதாநாயகியை பார்த்தால் நம்பவே முடியவில்லை... இவர்கள் எல்லாம் நடித்தால் யார் பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது... ஆனால் பசங்க, சுப்ரமணியபுரம், தூத்துக்குடி என்று சில படங்கள் வெற்றியடைய தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் எல்லா படங்களும் இந்த படங்களை போல் நேர்த்தியாக இருப்பதாக தெரியவில்லை...

இவர்கள் இப்படி படம் எடுக்கக் காரணமாய் அமைவது எது?

டிஜிட்டல் தொழில்நுட்ப வரவால் பிலிம் இல்லாமல் குறைந்த செலவில் படம் எடுக்க முடிவது...

பணப்புழக்கம் அதிகரிப்பு,

படமெடுப்பதற்கு உண்டான பணத்தேவைக்கும், கையிருப்புக்கும் உள்ள இடைவெளி குறைவு...

தொழில்நுட்பத்தின் வீச்சு...

மற்றும் தொழிநுட்பம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... போன்றவற்றை சொல்லலாம்...

பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாதவர்களின் படங்களை பார்க்கும் போது எனக்கு இப்படி தான் தோன்றும்

1. நிறைய பணம் உள்ள நபர் விளம்பரம், புகழுக்கு ஆசைப்பட்டு படம் எடுக்கிறார்.

2. கலைத்தாய்க்கு தன்னால் தான் சிறப்பு செய்ய முடியும் என்று கண்மூடித்தனமாக நம்பும் இயக்குநரிடம் ஏமாந்த தயாரிப்பாளர்.

3. எப்படியும் போட்ட காசை எடுத்து விடலாம் என்று எண்ணி வேறு வியாபாரத்தில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள்.

4. வேறு வியாபாரத்தில் வரும் எக்கசக்க லாபத்தில் கறுப்பு பணமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாய் மாற்ற, அல்லது கறுப்பு பணமாய் மாற்ற சினிமா எடுக்கும் பணக்காரர்கள்.

5. மகனையோ, மகளையோ வைத்து படம் எடுத்து அவர்கள் பிரபலமானால் வெளி படங்களில் நடிக்க வைத்து நிறைய துட்டு பார்க்கலாம் என்றெண்ணும் இரண்டாம் நிலை சினிமாக்காரர்கள்.


சார் கண்டிப்பா கலெக்ஷன் அள்ளிரலாம் சார் என்று இயக்குநர்களின் வார்த்தைகளுக்கு மயங்கி கையைச் சுட்டு கொள்பவர்கள் பலர்.

அப்படி எடுக்கும் படங்களின் பாடல்கள் சிறப்பாக வராததையோ, அடிப்படைகளான ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்புகள் சரியாக அமையாததையோ கண்டுபிடிக்க தெரியாத அப்பவிகளாய் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இருப்பது தான் வேதனை.

அதே சமயம் திறமையான இயக்குநர் அமைந்து சிறப்பாக படம் எடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் படத்தை வெற்றியடைய வைத்து விடுவார்கள் என்பதும் உண்மை.. கதாநாயகனோ, நாயகியோ தோற்றப் பொலிவோடு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்பதை 70-களில் இருந்து மக்கள் பலமுறை புரிய வைத்து இருக்கிறார்கள்..

ஆனால் பெரும்பான்மையான படங்களில் ஒரு தொழில் நேர்த்தி இருப்பதில்லை... கதை, நல்ல பாடல்கள், நல்ல நடிப்பு, கோர்வையான காட்சி அமைப்புகள் என்று எதுவுமே இருப்பதில்லை...

ஏனோ தானோ என்று, சில சண்டைகள், ஐட்டம் பாட்டுகள் என்று எதைக் கொடுத்தாலும் படம் ஓடி விடும் என்பது போல அமைச்சூர்த்தனமான சிந்தனைகள் தான் காரணம்.

சமீபத்தில் வெளிவந்த மிக பிரபலமான சண்டை இயக்குனர் ஒருவரின் படமும் இதற்கு விதிவிலக்கல்ல..

சி சென்ட்டர்ல கலெக்ஷன் பாத்துரலாம், பி சென்ட்டர்ல கலெக்ஷன் பாத்துரலாம், என்றெல்லாம் கனவுக் காணும் பல படங்கள்.. உலக தொலைக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்பது போன்ற குறைந்தபட்ச அலட்டல்கள் கூட இல்லாமல் நேரடியாக இரவு பதினோரு மணிக்கு கே.TV போன்றவற்றில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனவுத் தொழிற்சாலையாய் இருந்த சினிமாவை குடிசைத் தொழிலாக்கியவர் என்று ஒரு இயக்குநரை பற்றி குறிப்பிடுவார்கள்... அப்படி சொல்வது சரியாகாது என்பது என் தாழ்மையான கருத்து…

சினிமா என்பது ஒரு ஊடகம்... இது ஜனநாயக நாடு... யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்... ஆனால் செய்வதை திருந்த செய்தால் மக்களுக்கும் நல்ல படங்களை பார்த்த திருப்தி இருக்கும், தயாரிப்பாளரும் இன்னொரு படத்தை எடுத்து சினிமா தொழில் வளர ஊக்குவித்தது போலவும் இருக்கும்...

அவ்வளவு தான் என் ஆதங்கம்.

செவ்வாய், ஜூன் 16, 2009

கேள்விகள்

நம்மைச் சுற்றி நடக்கும் எவ்வளவோ அநியாயங்களுக்கு நம்மையும் அறியாமல் நாம் பழக்கப் படுத்தப்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு அநியாய சம்பவம் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் போல இருக்கும். ஆனால் எல்லோரிலும் நான் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என தயக்கம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒரு அரசு ஊழியர் கடமையை செய்ய மறுக்கிறார் என் வைத்துக் கொள்வோம். நம்மில் எத்தனை பேர் தட்டி கேட்க விழைகிறோம்? நமக்குள்ளேயே சத்தம் போட்டு போட்டு நமக்கு ஒரு சமுதாய செவிட்டு தன்மையே வந்து விடுகிறது...

ஒரு தலைவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறான் என்று சொன்னால், மற்றவர்கள் சேர்ப்பதில்லையா, அவரை பாருங்கள், இவரை பாருங்கள் என்று சொல்லும் தொண்டர்கள் தான் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள்.

நம் தலைவர் இவ்வளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று தனக்கு தானே கூட கேட்டு கொள்ள அவர்கள் தயாராயில்லை.. ஏன்?

என்ன தயக்கம்? தலைவர்கள் தவறான வழியில் சொத்து சேர்க்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போதும், ஏன் நாம் அதை எதிர்த்து ஒன்றுமே செய்வதில்லை...

இந்த சமுதாயம், இந்த சமுதாயம் என்று நாம் முன்னிலையில் வைத்து பேசும் சமுதாயமே நாம் தான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

சமுதாயத்தில் தவறுகள் நடக்கிறது என்று சொல்வோமானால் நாம் தான் தவறு செய்துக் கொண்டிருப்பதாக அர்த்தம்.

நாம் செய்யும் சிறு போக்குவரத்து விதிமுறை மீறல், வரி ஏய்ப்பு, சிறு குற்றங்கள் நாம் அறிந்து செய்யாவிட்டாலும், நம் அறிவுக்கு அவை தவறு என்று நன்றாகவே தெரியும்.

வோட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை தட்டி கேட்க விழைய மாட்டார்கள்.

சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்யும் பெரும் மக்கள் கூட்டம் அதானாலேயே மேற்கூறிய தவறுகளை தட்டி கேட்காமல் இருக்கின்றனரோ?

மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க போனால் நான் செய்த, செய்யும் இந்த விதிமுறை மீறலை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் தான் பெரும்பாலானவர்களை தவறு நடக்கும் போது கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறது என்று எனக்கு படுகிறது...

சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்து பழகுவதால் தான், பெரிய தவறுகள் நடக்கும் போது அவை நமக்கு உறுத்தலாக தோன்றுவதில்லை.

போக்குவரத்து விதிகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதில் ஆரம்பித்து, வரிகளை ஒழுங்காக கட்டுவது, சிறு சிறு விதிமுறைகளை (உ-ம் வரிசையில் செல்லுதல்) மதித்து நடப்பது போன்றவற்றை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் நாட்டில் தவறுகள் குறைய தொடங்கும்.